search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடைகால உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு"

    விழுப்புரத்தில் கோடைகால உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி மையத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்புத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் கோடைகால உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி மையம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் வரலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு கண்காட்சி மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து அவர் கூறியதாவது:-

    அரசு உத்தரவின்படி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கோடை காலத்தில் உணவு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும், கலப்பட உணவுப்பொருட்களை கண்டறிவதற்கான வழிமுறைகளை தெரிந்துகொள்ளவும், கலப்பட உணவு பொருட்களை உட்கொள்வதால் மனிதனுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் முழுவதும் அலுவலக வேலை நாட்களில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் இந்த மையம் செயல்படும்.

    இங்கு தெருவோர உணவு கடைகளில் கவனிக்க வேண்டியவை, உணவகங்களில் கவனிக்க வேண்டியவை, பழம், பழச்சாறு, குளிர்பான கடைகளில் கவனிக்க வேண்டியவை, உணவு பொட்டலங்களின் விவர சீட்டில் கவனிக்க வேண்டியவை பற்றிய விவரங்கள் அடங்கிய பலகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் உணவில் கலப்படங்களை கண்டறிய மேற்கொள்ள வேண்டிய விரைவு சோதனைகள் குறித்தும் உணவு பாதுகாப்பு அலுவலர்களால் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்படுகிறது. உணவுப்பொருட்களின் தரம் மற்றும் கலப்படம் குறித்தும், உணவுப்பொருட்கள் வாங்கும்போது கண்டறியப்படும் குறைகளை ‘வாட்ஸ்-அப்’ மூலம் புகார் தெரிவிப்பதற்கும் இந்த மையத்தில் பொதுமக்களுக்கு தகவல் அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், எம்.பி.க்கள் ராஜேந்திரன், ஏழுமலை, சக்கரபாணி எம்.எல்.ஏ., விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, உதவி கலெக்டர் (பயிற்சி) வித்யா உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    ×